பறவைகளுக்கு ஊரடங்கு புத்தகம் குறித்து ஏ.சண்முகானந்தம்
வேடந்தாங்கல், வடூவூர், வேட்டங்குடி, பழவேற்காடு, திருவில்லிபுத்தூர் காப்பிடம் என தமிழகத்தின் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்த காப்பிடங்களுக்குச் சென்று வந்த அனுபவத்தை படிக்கும் அறிமுக வாசகர்களுக்கு பறவைகள் குறித்த எளிமையான அறிமுகத்தை நூலாசிரியர் கொடுக்கிறார்.
சென்னையில் கண்டுகளித்த வலசைப் பறவையான சூரைமாறி (Rosy Starling) குறித்த அனுபவமும், அமூர் வல்லூறு குறித்த கட்டுரையும் இத்தொகுப்பின் முக்கிய கட்டுரையாக அமைந்துள்ளது.
ஏனெனில், சில ஆண்டுகளுக்கு முன்பு அமூர் வல்லூறு (Amur Falcon) தமிழகத்தின் கூந்தங்குளம் பகுதிக்கு வலசை வந்த போது, நடைபெற்ற கசப்பான சம்பவங்கள் மனதில் நிழலாடிச் செல்கின்றன. அதனடிப்படையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இத்தகைய அறிமுகக் கட்டுரைகள் மிகவும் அவசியமாகிறது.
கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பல மாவட்டங்களில் அதிகளவிலான மரங்கள் வேரோடு சாய்ந்தன.
வாழ்விடத்தை இழந்த சூரைமாறிகள் சென்னையின் கிண்டிக்கருகில் இருந்த ஒரு ஆல, அரச மரத்தில் ஆயிரக்கணக்கானவை கூடியிருந்த அழகை காணும் வாய்ப்பை நூலாசிரியர் பெற்றுள்ளார். அந்த அனுபவத்தை நூலை படிக்கும் வாசகனுக்கும் கொண்டு சேர்ப்பதில் வெற்றி பெற்றுள்ளார்.
நத்தைக் குத்தி நாரை இரு வேறு கட்டுரைகளில், வெவ்வேறு தளங்களில் பேசப்பட்டுள்ளது.
ஆந்தைகள், தேவாங்கு மட்டுமின்றி அந்திப்பூச்சிகளைத் (Moth) தேடியலைந்த அனுபவத்தோடு, மற்றொரு கட்டுரையில் வண்ணத்துப்பூச்சிகளின் உலகத்தில் பயணித்ததையும் நூலாசிரியர் அழகுடன் அனுபவத்தையும் எளிமையான வடிவத்தில் பதிவு செய்கிறார்.
சென்னையில் சிட்டுக்குருவிகள் கணக்கெடுப்பிற்காக பயணித்த அனுபவம், சிட்டுக்குருவிகளுக்காக நேரத்தை செலவிடும் நல்உள்ளங்களைத் தேடியலைந்த அனுபவத்தையும் சிறு கட்டுரைகளாக்கியுள்ளார்.
பறவை நோக்கல், பறவை கணக்கெடுப்பு போன்றவை அறிவியலடிப்படையில் அமைந்த ஒரு அற்புதமான பொழுதுபோக்கு. தற்போது இத்துறையில் நிறைய இளைஞர்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை ஒரு பொழுதுபோக்கு என்ற பார்வையில் மட்டுமின்றி அறிவியல் கண்ணோட்டத்துடன், வாசிப்பு பழக்கமும் ஒத்திசைந்தால் தேடல் என்பது வசப்படும். ஆய்வு முழுமையடையும்.
அதன்வழியே சமூகத்திற்கும் உயிரினங்களுக்குமான உறவை நுட்பமான அளவிலும், வட்டார அளவிலும் அறிந்துக் கொள்வதற்கான தேவை இதில் அடங்கியுள்ளது.
அந்தவகையில், இது ‘மக்கள் அறிவியலாக’ (People Science) பார்க்கப்படுகிறது. ஜா.செழியனின், ‘பறவைகளைப் பின்தொடர்ந்த பயணம்’ என்ற இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளியாக அமையும்.
பறவைகளுக்கு ஊரடங்கு நூலாசிரியர் ஜா.செழியன், பறவை நோக்கல் பறவைக் கணக்கெடுப்பு, பறவைப் பந்தயம் என ‘பறவைகள் உலகத்தில்’ வாழ்பவர்.பறவை நோக்கலில் ஆர்வமுடன் ஈடுபட நினைக்கும் இளைஞர்களுக்கு இத்துறை குறித்து எளிமையாக விளக்கி வருகிறார்.
அதனடிப்படையில் பறவைகள், பூச்சிகள், இரவாடிகள் குறித்து தனக்கு கிடைத்த அனுபவங்களை ’பறவைகளைப் பின்தொடர்ந்த பயணம்’ என்ற எளிமையான எழுத்துக்களை உள்ளடக்கிய தொகுப்பாக்கியுள்ளார்.
பறவைகளுக்கு ஊரடங்கு நூல் இத்துறையில் நுழையும் புதுமுக இளைஞர்களுக்கானது.
முதல் கட்டுரை – பறவைகளுக்கு ஊரடங்கு
கடைசியாகப் பறவைகளுக்கும் 20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. நாளை மறுநாள் முதல் இது அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை விட்டு வேறு எங்கும் செல்லக் கூடாது.
மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை மட்டுமே உண்ண வேண்டும். உங்கள் மரத்துக்கு வேறு பறவைகள் வந்தால் எங்களுக்குத் தகவல் கொடுக்க வேண்டும். காரணம் – தொற்று பரவுவதைத் தடுக்க.
இந்த தகவல்களை எப்படி அனைத்துப் பறவைகளுக்கும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்தப் பணியைக் கொடுத்துவிடுவோம்.
அவரவர் இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி ஒட்டிவிட வேண்டும். மரத்தில் இருக்கும் ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக்கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிட வேண்டும்.
இது தொலைக்காட்சியில் முக்கிய செய்தியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது.
இரவு நடைபெற்ற தொலைக்காட்சி விவாத மேடையில் ‘பறவைகளின் ஊரடங்கு’தான் தலைப்பு. பறவைகள் பற்றி சற்றும் அறியாத, ஓரளவு தெரிந்த நபர்கள் விவாத மேடையில் அமர்ந்திருந்தனர்.
அதில் ஒருவர் இப்படிப் பேசினார், “ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது இதுபோல் பறவைகளுக்கு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் எதையும் காயவைக்க முடியவில்லை. இந்த பறவைகளால் ஒரே தொல்லை” என்று ஆக்ரோஷமாகப் பேசி முடித்தார்.
“பறவைகள் இருந்தால்தானே பூச்சிகள் கட்டுப்படும், மனிதர்கள் வெளியே நடமாட முடியும்” என்று நெறியாளர் கூறினார். “பூச்சிகளை, பூச்சிக்கொல்லி அடித்துச் சாகடிக்கலாம்.
பறவைகளுக்கு நிச்சயம் ஊரடங்கு தேவை” என்று முதலில் பேசியவர் மேஜையை ஓங்கித் தட்டினார்.
எங்கள் தெருவில் காகங்கள் நிறைய இருக்கின்றன. சில நேரம் கார் மேல் ‘கக்கா’ போய்விடுவதால் காரை இரண்டு நாளுக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றிக் கழுவ வேண்டியுள்ளது.அதனால் அனைத்து பறவைகளுக்கும் இல்லையென்றாலும் காகங்களுக்காக மட்டுமாவது மாதம் ஒரு முறை ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று காகத்தின் ‘கக்கா’ பிரச்சினையைப் பேசினார் கார் வைத்திருந்த நபர்.
வீட்டிற்குள் அணில் சில தடவை கூடு கட்டிவிடுகிறது. அதனால் பறவைகள்போல் சிறு விலங்குகளுக்கும் ஊரடங்கு தேவை என்பது ஒரு பிரகஸ்பதியின் கருத்து. இப்படியாக தொலைக்காட்சி விவாதம் சென்றுகொண்டிருந்தது.
அனைத்து மக்களும் தங்கள் அருகில் உள்ள மரத்தில் சிறு தாளில் ஊரடங்கை எழுதி ஓட்டிவிட்டீர்களா என்ற அடுத்த முக்கிய செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சரி, நம் தெருவில் இருக்கும் சிட்டுக்குருவிக்கு தகவல் சொல்ல அருகில் சென்றேன்.
சிட்டுக்குருவிகள் வாழும் இடத்திற்கு சென்று சிட்டுக்குருவிகளிடம் நாளை முதல் உங்களுக்கு ஊரடங்கு இடப்பட்டுள்ளதால், நீங்கள் எங்கும் வெளியே பறந்து செல்லக் கூடாது என்று சொன்னேன்.
அதற்குக் குருவிகள் அனைத்தும், நாங்கள் எப்பொழுதும் இங்கேதான் இருப்போம் போய் உன்னுடைய வேலையை பார் என்று கூறின.
சிட்டுக்குருவிக்கு ஊரடங்கு விஷயம் தெரிந்துவிட்டது அதுதான் கோபமாகப் பேசுகிறது என்பதைப் புரிந்துகொண்டேன். தெருவில் இருந்த மரத்தில் சிறு தாளில் பறவைகளுக்கு ஊரடங்கு எழுதி ஓட்டினேன்.
மரத்திலிருந்த சில காகங்கள் என்னைப் பார்த்து, நீயே இந்த மரத்தைப் பார் ஒரு பூவும் பழமும் இல்லை. அப்போ இரை எப்படிக் கிடைக்கும் என்று காகம் கேட்ட கேள்வி எனக்கு நியாயமாகத் தெரிந்தது.
வெளிநாட்டுப் பறவைகள்
வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய சில பறவைகள் இந்த ஊரடங்கு குறித்து அரசிடம் முறையிட்டன.
நாங்கள் எங்கள் நாட்டிற்கு இப்பொழுது புறப்பட்டால்தான் அங்கு முட்டையிட்டு குஞ்சுகளுடன், அடுத்த குளிர்காலத்தில் மீண்டும் இந்தியா வர முடியும். அப்படி இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை சுழற்சி மாறிவிடும்.
ஏன் அடுத்த தலைமுறை இல்லாமல் கூடப் போய்விடலாம். அதனால் நாங்கள் எங்கள் நாட்டிற்கு பறந்து செல்ல அனுமதியுங்கள் என்று கோரிக்கை விடுத்தன. அரசு இந்த கோரிக்கையை பரிசீலைனைக்கு ஏற்றுக்கொண்டதாகக் கூறியது.
புறா
கோபுரத்தில் வாழும் புறாக்களான நாங்கள், மரத்தில் வாழ்வதில்லை. கோபுரத்தில் இரை கிடைக்காது.
வெளியே சென்றால்தான் இரை கிடைக்கும் என்று அவை சொன்னதற்கு, உங்களுக்கு கோயில் நிர்வாகங்களை இரை கொடுக்க சொல்கிறோம் என்றது அரசு..
உடனே புறா புத்திசாலித்தனமாக, இதேபோல் வீட்டின் மொட்டை மாடிகளிலும், உயர்ந்த கட்டடங்களிலும் எங்கள் சொந்தங்கள் வாழ்கின்றன. அவர்களுக்கும் இரை கிடைக்க வழிவகை செய்யுங்கள் என்று கூறின.
அரசு அந்தக் கோரிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
S.O.Mohammed Ghani –
அருமை…